சென்னை: கேரளாவில் டிசம்பர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ள சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சிக்கு, தமிழக உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை சென்னையை சேர்ந்த மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், கர்நாடக மாநில பிளாஸ்டிக் சங்கம் மற்றும் தெலங்கானா மற்றும் ஆந்திரா பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கேரளா பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்துகிறது.
இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பி.கே.மேத்யூ, இணை ஒருங்கிணைப்பாளர் இ.சந்தோஷ்குமார் ஆகியோர் கூறுகையில், சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியானது, டெல்லி மற்றும் மும்பையில் நடந்த கண்காட்சிகளுக்கு அடுத்த 3வது பெரிய கண்காட்சியாகும். பிளாஸ்டிக் தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவ இது நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடனும், பன்முக தன்மையுடனும் பல்வேறு விஷயங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளன என்றனர்.